தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் களம் கண்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி அக்கட்சியின் வேட்பாளர்கள் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கியுள்ளனர்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தவெக -வின் இந்த எழுச்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறிப்பாக, முதல் தேர்தலிலேயே முக்கிய கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் அக்கட்சியின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள், தமிழக மக்களின் மாற்றத்திற்கான தேடலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற மற்றும் முன்னிலையில் உள்ள தனது வேட்பாளர்களைப் பாதுகாப்பாகத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக மாமல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதி முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு, அங்கு வேட்பாளர்களைத் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் குதிரை பேரம் அல்லது பிற அரசியல் அழுத்தங்களிலிருந்து வேட்பாளர்களைக் காக்கும் பொருட்டு, அந்த விடுதியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேரடியாகப் பாதுகாப்பை மேற்பார்வையிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

