தற்போதைய கிரிக்கெட் உலகில் மிகவும் அஞ்சப்படும் ஒரு பெயராக உருவெடுத்துள்ளார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.
இவரது அதிரடி ஆட்டத்தைக் கண்டு ஜஸ்பிரித் பும்ரா, ஜோஷ் ஹேசில்வுட் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களே கலங்கிப் போயுள்ளனர்.
சமீபத்திய போட்டிகளில் பும்ராவின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி அசத்திய வைபவ், தனது அதிரடியால் உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ளார். 2026 ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், வரவிருக்கும் அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி அவர் தேர்வு செய்யப்பட்டால், சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை முறியடித்து, இந்தியாவிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் மிகக் குறைந்த வயதுடைய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
வைபவ்வின் திறமை குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, வைபவ் தற்போது சர்வதேச கிரிக்கெடடில் விளையாடத் தயாராக இருக்கிறார். ஆனால், அவர் டி20 ஃபார்மெட்டிற்கு மட்டுமே தகுதியானவராகத் தெரிகிறார். வெறும் பணத்திற்காக டி20 விளையாடினால் மட்டும் போதாது. விமர்சகர்கள் உங்களை மதிக்க வேண்டுமெனில், டெக்னிக்கில் சில மாற்றங்களைச் செய்து பந்தின் திசையை அறிந்து ஆட வேண்டும்.
வைபவ் இந்திய அணியில் இடம்பிடிக்கத் தயாராக இருந்தாலும், சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வலுவான தொடக்க வீரர்கள் இருக்கும் நிலையில், அவருக்கு இடம் கிடைப்பது எளிதான காரியம் அல்ல. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வைபவ் கால் பதிக்க வேண்டுமெனில், தனது பேட்டிங் நுட்பங்களை அவர் மெருகேற்ற வேண்டும் என்றும் மஞ்ச்ரேக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், ஐபிஎல் மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர்களில் அவர் காட்டிய அபாரமான ஆட்டம், அவரை இந்திய அணியின் கதவைத் தட்ட வைத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

