தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பேராவூரணி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சந்திர காண்டீபன், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி வேட்பாளராக சந்திர காண்டீபன் அறிவிக்கப்பட்டு, களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாகச் சமூக வலைதளங்களில் சந்திர காண்டீபன் குறித்துப் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகின. அவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததாகவும், குடும்பத் தகராறு காரணமாக அடிதடி வழக்குகளில் சிக்கியவர் என்றும் தகவல்கள் பரவின. குற்றப்பின்னணி கொண்ட ஒருவருக்கு எப்படி த.வெ.க வாய்ப்பு வழங்கியது எனப் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சந்திர காண்டீபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது "என் மீது கஞ்சா வழக்கு இருப்பதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இதுகுறித்து விசாரித்துக் கொள்ளலாம். என் மீது எந்தவிதமான வழக்குகளும் கிடையாது. இந்த அவதூறுகளால் என் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
பள்ளியில் பயிலும் என் மகள்களிடம், அவர்களது தோழிகள் இதுபற்றிக் கேட்டு சங்கடப்படுத்துகிறார்கள். ஆசிரியையாகப் பணியாற்றும் என் மனைவியும் அக்கம் பக்கத்தினரின் கேள்விகளால் நிம்மதியிழந்துள்ளார். ஒருகட்டத்தில் மன உளைச்சல் தாளாமல் குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்குச் சென்றோம்.
இந்த இக்கட்டான சூழலில் கட்சித் தலைவர் விஜய் தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். "அரசியல் என்றால் இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். நீங்கள் எதற்கும் கவலைப்படாமல் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள். நான் நேரில் வந்து மக்களுக்கு உண்மை நிலவரத்தைச் சொல்கிறேன்" என விஜய் தைரியம் அளித்ததாக அவர் கூறினார். மேலும், இந்த அவதூறு பரப்புவோருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும், பேராவூரணி தொகுதி மக்கள் இந்த அரசியல் சதியை உணர்ந்து தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் சந்திர காண்டீபன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

