பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களைத் தடுக்க எவ்வளவு அபராதம் விதித்தாலும், எத்தனை விழிப்புணர்வு செய்தாலும் பலன் கிடைப்பதில்லை.
இதனால் மைசூரு மாநகராட்சி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. பொதுச் சுவர்களில் எங்கு பார்த்தாலும் பெரிய அளவிலான கண்ணாடிகளைப் பொருத்தியுள்ளனர். அங்கே சிறுநீர் கழிக்க வருபவர்கள், கண்ணாடியில் தங்களது முகத்தையே பார்க்க வேண்டியிருக்கும் என்பதால், கூச்சப்பட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிடுகின்றனர். இந்தியாவின் அடிப்படை நாகரீகத்தைக் கற்றுக்கொடுக்க இப்படி ஒரு "மிரர் தெரபி"யை கையில் எடுத்திருப்பது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மைசூரில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. "அறிவுரை சொன்னா கேக்க மாட்டாங்க, ஆனா தங்களோட முகத்தையே கண்ணாடியில் பார்த்தா கண்டிப்பா வெட்கப்படுவாங்க" என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதே சமயம், பெரியவர்களுக்கு அடிப்படைச் சமூக அக்கறையை உணர்த்த இவ்வளவு செலவு செய்து சுவர்களில் கண்ணாடி பொருத்த வேண்டிய நிலை இருப்பது வேதனையானது எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த 'கண்ணாடி ஐடியா' தற்போது பல இடங்களிலும் வைரலாகி வருகிறது.

