தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், விஜய் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும் எனத் தமிழக பாஜக அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் களமிறங்கி, மக்களின் மாபெரும் ஆதரவைப் பெற்றுள்ள விஜய்க்கு, ஒரு சிறந்த நிர்வாகியாகச் செயல்படக் குறைந்தபட்சம் 6 மாத கால அவகாசத்தை அனைத்துக் கட்சிகளும் வழங்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் மக்கள் தவெக-விற்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எம்.எல்.ஏ-க்களை விலை பேசும் 'குதிரை பேர' அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகப் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோருக்குக் கடிதம் எழுதவுள்ளதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தேசியத் தலைவர்கள் பேசி விஜய்க்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜய்யின் ஆட்சி சுதந்திரமாக அமைய பாஜக தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ள இந்த 'ஆதரவு கரம்' தமிழக அரசியலில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

