தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், புதிய சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் மற்றும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பல்வேறு சமூகத்தினரை உள்ளடக்கிய ஒரு கலவையான வெற்றியைப் பெற்றுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 25 சிறுபான்மையின வேட்பாளர்கள் எம்.எல்.ஏ-க்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற 25 பேரில், அதிகபட்சமாக தவெக சார்பில் 13 பேர் தேர்வாகியுள்ளனர். அக்கட்சியின் தலைவர் விஜய், மரிய வில்சன், தாகீரா உள்ளிட்டோர் இதில் அடங்குவர். கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் 15 ஆக இருந்த சிறுபான்மையின எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை, தற்போது 25 ஆக உயர்ந்துள்ளது. திமுக சார்பில் மனோஜ்பாண்டியன், ஆஸ்டின் ஆகியோரும், முஸ்லிம் லீக் சார்பில் இருவர், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தலா ஒருவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
புதிய சட்டப்பேரவையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 49 பேர் எம்.எல்.ஏ-க்களாகத் தேர்வாகியுள்ளனர். இதில் தவெக ஒரு முக்கியச் சாதனையைப் படைத்துள்ளது. தவெக சார்பில் 8 பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்களில் 4 பேர் வெற்றி பெற்று, பொதுத் தொகுதிகளிலும் தலித் வேட்பாளர்கள் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
தமிழக அரசியலில் கடந்த 10 ஆண்டுகளாகப் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் சட்டப்பேரவைக்குத் தேர்வாகாத நிலையில், இந்தத் தேர்தலில் தவெக அந்த மௌனத்தை உடைத்துள்ளது. அதன்படி மயிலாப்பூரில் தவெக சார்பில் போட்டியிட்ட வெங்கட்ரமணன் வெற்றி பெற்றுள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிராமண சமூகத்தைச் சேர்ந்த இருவர் சட்டமன்ற உறுப்பினர்களாகியுள்ளனர்.
புதிய சட்டப்பேரவைக்கு மொத்தம் 25 பெண் எம்.எல்.ஏ-க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு சமூகப் பின்னணியைக் கொண்டவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என ஒரு முழுமையான பிரதிநிதித்துவத்துடன் தமிழகத்தின் புதிய சட்டப்பேரவை நாளை கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

