தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் வெற்றி மற்றும் புதிய ஆட்சி மாற்றம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் தங்களது உண்மையான எதிரியை வீழ்த்துவதற்காக ஒரு 'போலியை'த் தேர்ந்தெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வி குறித்தோ அல்லது ஆட்சி மாற்றம் குறித்தோ அஞ்சப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள அவர், "பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வடிவத்தில் நாம் தமிழர் கட்சி இன்னும் வீரியமாகக் களத்தில் இறங்கிப் போராடும்" என்று சூளுரைத்துள்ளார். புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள கட்சிக்கு (தவெக) வாழ்த்துச் சொல்வதை விட எச்சரிக்கை விடுக்கும் தொனியிலேயே அவரது பதிவு அமைந்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில்,
புதிதாகப் பொறுப்பேற்கப் போகும் கட்சி, மக்களுக்கு நன்மைகள் செய்ய முன்வந்தால் அதை வரவேற்போம். ஆனால், அவர்கள் முந்தைய ஆட்சியாளர்கள் செய்த அதே தவறுகளைத் தொடருவார்கள் என்றால், முன்பை விட இன்னும் இன்னும் இறங்கி அடிப்போம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசியலில் தவெக கால்பதித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் இந்த "இறங்கி அடிப்போம்" என்ற நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

