பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா, 9/11 தாக்குதல் முதல் சோவியத் யூனியன் சிதைவு வரை பல முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தவர் எனப் போற்றப்படுகிறார்.
இவரை 'பால்கன் நாட்டின் நோஸ்ட்ரடாமஸ்' என்றும் அழைக்கிறார்கள். 1911-ல் பிறந்த இவரது இயற்பெயர் வங்கேலியா பாண்டேவா சுர்ச்சேவா என்பதாகும்.
தனது 12-வது வயதில் ஒரு பெரும் புயலில் சிக்கித் தனது பார்வையை இழந்த இவர், அதன்பிறகே தனக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் ஆன்மீக சக்தி கிடைத்ததாக நம்பப்படுகிறது. 'பாபா' என்ற சொல்லுக்கு பல்கேரிய மொழியில் 'பாட்டி' என்று பொருள்.
தற்போது நிலவும் ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலக நாடுகளின் பதற்றங்களுக்கு மத்தியில், பாபா வங்காவின் 2026-ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் கவனத்தைப் பெற்றுள்ளன.
2026-ஆம் ஆண்டில் ஒரு நாட்டின் மீதான தாக்குதலுக்குப் பிறகு மூன்றாம் உலகப்போர் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், ரஷியா மற்றும் அமெரிக்கா இடையே நேரடி மோதல் ஏற்படலாம் என்றும் அவர் கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், சீனா தைவானைக் கைப்பற்ற முயற்சிக்கும் என்றும், ஆனால் அதில் வெற்றி கிடைக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அறிவியலாளர்கள் இந்தக் கணிப்புகளை வெறும் கவித்துவமான கூற்றுகள் என்றும், இதற்கு முறையான ஆதாரங்கள் இல்லை என்றும் மறுக்கின்றனர்.
எது எப்படியிருப்பினும், போர் மேகங்கள் சூழ்ந்துள்ள இந்த வேளையில் பாபா வங்காவின் கணிப்புகள் உலகளவில் பேசுபொருளாகியுள்ளன.

