கடந்த மார்ச் 27-ம் தேதி வாரணாசி - தியோகர் வந்தே பாரத் ரயிலில் (வண்டி எண்: 22500) பயணித்த நிதி சின்ஹா என்ற பெண், ரயிலில் வழங்கப்பட்ட மதிய உணவைச் சாப்பிட்ட பிறகு தனக்குக் கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டதாகப் புகார் தெரிவித்துள்ளார்.
உணவைச் சாப்பிட்ட சில மணிநேரத்திலேயே அவரது மேல் உதடு பயங்கரமாக வீங்கியுள்ளது. இதுமட்டுமின்றி, அவரது 2 வயது மகனுக்கும் அந்த உணவைச் சாப்பிட்ட பிறகு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது வீங்கிய உதடு மற்றும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு ஆகியவற்றை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த அந்தப் பெண், உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் இது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ரயில்வே ஊழியர்கள் தனது புகாரை அலட்சியமாக அணுகியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஐஆர்சிடிசி, அந்த குறிப்பிட்ட நாளில் வழங்கப்பட்ட உணவுகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அவை திருப்திகரமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், வேறு எந்தப் பயணியும் இது போன்ற புகாரை அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளது. இந்த விளக்கத்தால் அதிருப்தியடைந்த அந்தப் பெண், "வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படாதது மகிழ்ச்சிதான், ஆனால் நானும் என் மகனும் பாதிக்கப்பட்டோம் என்பது உங்களுக்குப் பொருட்டாகத் தெரியவில்லையா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபகாலமாக வந்தே பாரத் ரயில்களில் வழங்கப்படும் உணவுகளில் புழுக்கள் இருப்பது போன்ற புகார்கள் அதிகரித்து வருவது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

