தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கல்விளை பகுதிக்கு அவர் பிரசாரம் செய்யச் சென்றபோது, அங்குள்ள பொதுமக்கள் அவருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்று கூறி, பெண்கள் அவரது வாகனத்தை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெண்களின் தொடர் எதிர்ப்பால் திகைத்துப் போன அமைச்சர், மேற்கொண்டு பிரசாரம் செய்ய முடியாமல் அங்கிருந்து பாதியிலேயே திரும்பிச் சென்றார்.
இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் ஒபிலியா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் முருகன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சருக்குச் சொந்த தொகுதியிலேயே மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

