சென்னை போரூர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சின்னத்திரை நடிகை சுபாஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பெங்களூருவில் தனது கணவருடன் வசித்து வந்தார். தற்போது படப்பிடிப்பு பணிகளுக்காக சென்னை வந்திருந்த அவர், போரூர் பகுதியில் தங்கி 'கயல்' உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு தனது அறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருந்த சுபாஷினியின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சுபாஷினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவர் உயிரிழப்பதற்கு முன்னதாகத் தனது கணவருடன் வீடியோ காலில் பேசியிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகை தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

