இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங், தற்போது இளம் வீரர்களை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
சுப்மன் கில், அபிஷேக் சர்மா முதல் பிரப் சிம்ரன் சிங் வரை பல நட்சத்திரங்களை அவர் செதுக்கி வருகிறார். இந்நிலையில், தனது சிஷ்யர்களை கிண்டல் செய்து யுவராஜ் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
கார் விபத்தில் காயமடைந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட், தனது மீட்சிக் காலத்தில் யுவராஜ் சிங்கிடம் பல ஆலோசனைகளைப் பெற்றார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் அசத்தி வரும் பண்ட், தனக்கு உதவிய யுவராஜ் சிங்கிற்கு நன்றிக்கடனாக ஒரு விலையுயர்ந்த 'கோல்ஃப் ஸ்டிக்' (Golf Stick) செட்டைப் பரிசாக அனுப்பியுள்ளார். அதனுடன், "அன்புள்ள யுவி பாஜி, உங்கள் ஆதரவிற்கு நன்றி.. விரைவில் கோல்ஃப் மைதானத்தில் சந்திப்போம்" என்ற நெகிழ்ச்சியான கடிதத்தையும் இணைத்துள்ளார்.
பண்ட் கொடுத்த பரிசை வீடியோவாகப் பகிர்ந்த யுவராஜ் சிங், தான் பயிற்சி அளித்த மற்ற இளம் வீரர்களை ஜாலியாக வறுத்தெடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, "வெட்கமில்லாத பசங்களா.. அபிஷேக் சர்மா, சுப்மன் கில், பிரப் சிம்ரன் சிங், நேஹால் வதேரா, அப்துல் சமத், நமன் தீர், பிரியான்ஷ் ஆர்யா.. உங்களுக்குக் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? ரிஷப் பண்ட்டைப் பார்த்து எதாவது கத்துக்கோங்க! ரிஷப்.. உனக்கு மிகப்பெரிய நன்றிகள் எனத் தனது பாணியில் ஜாலியாகக் கலாய்த்துள்ளார். தான் செதுக்கிய வீரர்கள் தனக்கு எந்தப் பரிசும் தரவில்லை என்பதை நகைச்சுவையாகக் குறிப்பிட்ட யுவராஜ், அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு டேக் செய்துள்ளார்.
இதேபோல் மற்றொரு வீடியோவில், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், "மைதானத்தில் வரும் அதிவேக பவுன்சர்களை விட, எனது மனைவிக்குத் தான் நான் அதிகமாகப் பயப்படுவேன்" என்று நகைச்சுவையாகக் கூறியதும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. கிரிக்கெட் நட்சத்திரங்களின் இந்த கலகலப்பான பக்கங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளன.

