அமெரிக்க மேலாளர்களுக்கும் இந்திய மேலாளர்களுக்கும் இடையே உள்ள பணி கலாச்சார வேறுபாடுகளைக் குறித்து ஆர்ஸூ சரவாகி என்ற பெண் பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தான் மூன்று நாட்களாக வேலையே இல்லாமல் சும்மா இருப்பதாக அமெரிக்க மேலாளரிடம் கூறியபோது, அவர் மிகவும் நிதானமாக, "பரவாயில்லை ஆர்ஸூ, சிறிது அமைதியான நேரத்தை அனுபவி, ஓய்வெடு" என்று பதிலளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதே விஷயத்தை இந்திய மேலாளரிடம் கூறியிருந்தால், அவர் உடனே தனது வேலைகளையும் சேர்த்துத் தந்துவிடுவார் என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டது பலரையும் கவர்ந்துள்ளது.
இந்த ஒப்பீடு குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ள பல பயனர்கள், இது தங்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு சூழல் என்று பதிவிட்டுள்ளனர்.
">
"வேலை இல்லாதபோது பதற்றமடையாத மேலாளர் கிடைப்பது அரிது," என்றும், "ஓய்வெடுக்கச் சொல்வதற்கும், அடுத்த வேலை கொடுப்பதற்கும் உள்ள அந்த வித்தியாசம்தான் உண்மையான கார்ப்பரேட் கலாச்சாரம்," என்றும் பலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
பணியிடங்களில் நிலவும் அதிக அழுத்தம் மற்றும் மேலாளர்களின் அணுகுமுறை குறித்த இந்த நகைச்சுவையான வீடியோ, கார்ப்பரேட் பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

