பெங்களூருவைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக ஃபேஸ்புக்கில் இருந்த ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாப் பக்கத்தைத் தொடர்பு கொண்டு, விசா மற்றும் விமான டிக்கெட்டுகளுக்காகப் பல தவணைகளில் மொத்தம் 12.77 லட்ச ரூபாயைச் செலுத்தியுள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த நிறுவனம், திடீரெனப் பயணத்தை ரத்து செய்வதாகக் கூறி வெறும் 1.18 லட்ச ரூபாயை மட்டுமே திருப்பி அளித்துவிட்டு மீதமுள்ள 11.59 லட்ச ரூபாயை மோசடி செய்துள்ளது.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து, அந்த ஃபேஸ்புக் பக்கத்தை நடத்தியவர்கள் யார் மற்றும் அவர்கள் பணத்தை மாற்றிய வங்கி கணக்குகள் குறித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை இழக்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

