தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்காக ஒட்டுமொத்த மாநிலமே காத்துக்கொண்டிருக்கும் வேளையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களுடன் நடத்திய முக்கிய ஆலோசனை நிறைவடைந்துள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய நிலவரங்கள் குறித்து விரிவாக ஆலோசித்த விஜய், நிர்வாகிகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக, தேர்தல் களத்தில் தவெக-விற்காக இரவு பகலாக உழைத்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்களுக்கு விஜய் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர்களின் களப்பணி தான் கட்சியின் பலம் என்பதை அவர் இந்த ஆலோசனையின் போது அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
மேலும், வேட்பாளர்களிடம் பேசிய விஜய், "தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. முடிவு என்னவாக இருந்தாலும், நான் மக்களைச் சந்திப்பேன். மக்களுடனான நமது பயணம் தொடரும்" என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த 'மாஸ்' அறிவிப்பு தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுக்குப் பிறகு விஜய் ஒரு மிகப்பெரிய மாநில அளவிலான சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டுள்ளாரோ என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

