மதுரை அரசரடியில் உள்ள மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ , நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும் என்று அதீத தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-யை மிகக் கடுமையாக விமர்சித்தார். "புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தனது திரைப்படங்களில் கூட பெண்களை இழிவுபடுத்தவோ அல்லது மது அருந்துவது போன்ற காட்சிகளிலோ ஒருபோதும் நடிக்க மாட்டார்; ஆனால் விஜய் அப்படியில்லை" என்று சுட்டிக்காட்டிய செல்லூர் ராஜூ, விஜய் அரசியலுக்கு வந்த பின்னரும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது ஒரு தொடர் நாடகம் என்றும், அவர் இன்னும் சினிமாவில் நடிப்பது போலவே நிஜ வாழ்விலும் நடித்து வருவதாகவும் சாடினார்.
எம்ஜிஆர் பெயரைச் சொல்லி அரசியல் செய்ய முயற்சிக்கும் விஜய்யின் பாச்சா பலிக்காது என அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

