ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கைகள் தற்போதைக்கு நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல் போக்குவரத்து மீது ஈரான் ஏதேனும் புதிய தாக்குதல்களை முன்னெடுத்தால், அதற்கு "பேரழிவை ஏற்படுத்தும்" வகையிலான பதிலடியைக் கொடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் முக்கிய வர்த்தகப் பாதையான இப்பகுதியில் நிலவும் பதற்றம் போர் நிறுத்தத்தை பாதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், தேவைப்பட்டால் மீண்டும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை கடற்படை, கப்பல்கள் அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது நாளாக இடைமறித்து அழித்து வருவதாகக் கூறியுள்ள நிலையில், தெஹ்ரான் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியில் நிலவும் தொடர்ச்சியான மோதல்கள், உலகளாவிய வர்த்தகம் மற்றும் பிராந்திய அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.

