ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலக நாடுகளின் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா விதித்த 48 மணி நேரக் கெடுவை துச்சமாக மதித்த ஈரான், தற்போது இந்த ஜலசந்தியை ஈராக் நாட்டிற்கு மட்டும் முழுமையாகத் திறந்துவிட்டுள்ளது. இந்தப் போரில் ஈரான் மக்களுக்கு ஆதரவாக ஈராக் தோள் கொடுப்பதால், அவர்களின் கப்பல்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் பொதுமக்களையும், மருத்துவமனைகளையும் குறிவைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான், இந்த நெருக்கடியான சூழலில் தனது "நண்பன்" ஈராக்கிற்கு மட்டும் இந்தச் சலுகையை வழங்கியுள்ளது பெரும் ராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குத் தூண்டுதலாக இருந்து உதவி வருவதாகக் கூறி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) ஈரான் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க சர்வதேச நாடுகள் ஒருபுறம் அழுத்தம் கொடுத்து வந்தாலும், தனக்கு எதிராகச் செயல்படும் நாடுகளின் கப்பல்களுக்குத் தடை நீடிக்கும் என்பதில் ஈரான் பிடிவாதமாக உள்ளது. அடுத்த சில வாரங்களில் போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டாலும், அதற்குள்ளாக ஈரான் எடுக்கப்போகும் அதிரடி முடிவுகள் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
குறிப்பாக, ஈராக்கிற்கு வழங்கப்பட்ட இந்த விலக்கு மற்ற அரபு நாடுகளிடையே புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

