நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் தன் விளையாடிய விதம் குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வி 40 ரன்கள் எடுத்தார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது. அணியின் கேப்டன் ருத்ராஜ் 6 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
.
இறுதி வரை களத்தில் நின்ற அவர் 52 பந்துகளை எதிர்கொண்டு ஏழு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 87 ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார். இதனால் சிஎஸ்கே 17.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் போட்டிக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சாம்சன், தான் விளையாடிய விதம் குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது "மக்கள் என்னை சேட்டா என்று அழைப்பதை விட சஞ்சு என்று அழைப்பது தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் இப்போது அதிரடியாக விளையாடுவதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறேன். இதுதான் எனக்கு சரியாக பொருந்துகிறது. நீங்கள் அடிப்படையை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வேலையை சரியாக செய்வதற்கு கைகளை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். நான் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இதற்குப் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.
என் பேட்டிங்கை பொறுத்த வரை மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் பந்து வீச்சாளர்களுக்கு தகுந்தவாறு ஆடுகளத்தில் நகர்ந்து விளையாடுவது எனக்கு கை கொடுக்கிறது. முதலில் பேட்டிங் செய்யும்போது உங்கள் மீது நம்பிக்கையை வைத்து உங்கள் திட்டங்களுக்கு ஏற்ப நகர்ந்து விளையாட வேண்டும். அது எனக்கு இப்போது மிகவும் நன்றாக கை கொடுத்து வருகிறது. நான் எப்போதுமே அமைதியானவன் தான். எங்களுக்கு இன்னும் சில போட்டிகள் இருக்கிறது. எனவே அதில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற முயற்சிக்கிறோம்" என்று அவர் பேசியிருக்கிறார்.

