தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வரவு, திராவிட கட்சிகளுக்கு இடையே ஒருவிதமான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது.
குறிப்பாக, நடிகர் விஜய்யின் பொதுக்கூட்டங்களிலும், அவர் செல்லும் இடங்களிலும் கூடும் பிரம்மாண்டமான மக்கள் கூட்டத்தை கண்டு ஆளுங்கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த அலை தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த திராவிடக் கட்சிகள், நேரடியாக விஜய்யை எதிர்கொள்ளத் தயங்கி, தற்போது மறைமுகமான வதந்திகளை பரப்புவதன் மூலம் அவரது அரசியல் பயணத்தை தடுக்க முயல்வதாகத் தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் தற்போது ஒரு புதிய வதந்தி காட்டுத்தீயாய் பரப்பப்பட்டு வருகிறது. அதாவது, விஜய்யின் வேட்புமனுவில் குளறுபடிகள் இருப்பதாகவும், அதனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் வதந்திகள் கிளப்பப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக போட்டியிடும் சுமார் 40 வேட்பாளர்களின் மனுக்களும் ஒருசில காரணங்களால் நிராகரிக்கப்படும் என்ற ஒரு பிம்பத்தை திட்டமிட்டு உருவாக்கி வருகின்றன. புதிய கட்சி என்பதால் இவர்களுக்கு போதிய அனுபவம் இருக்காது என்ற எண்ணத்தில் இத்தகைய தகவல்கள் பரப்பப்படுகின்றன.
ஆனால், இந்த வதந்திகளை தமிழக வெற்றி கழகத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் அடியோடு மறுப்பதோடு, மிகுந்த தன்னம்பிக்கையுடனும் காணப்படுகின்றனர். ஒரு புதிய கட்சியாக தேர்தலை சந்திக்கும் போது எத்தகைய சட்ட சிக்கல்கள் வரும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப மிக நுணுக்கமாக திட்டமிட்டு செயல்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு வேட்புமனுவும் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, அனுபவம் வாய்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களை கொண்ட ஒரு குழுவின் மூலம் பலமுறை சரிபார்க்கப்பட்ட பின்னரே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாக ரீதியாக தவெக எடுத்துள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், எதிர்க்கட்சிகளின் கணக்குகளை தலைகீழாக மாற்றியுள்ளன. வேட்புமனுவில் ஒரு சிறு புள்ளி கூட தவறாக இருக்கக்கூடாது என்பதில் விஜய் மிக உறுதியாக இருந்ததாகவும், அதற்காக ஒரு குழுவை அமைத்து சொத்து விவரங்கள் முதல் கல்வித் தகுதி வரை அனைத்தையும் சட்டரீதியாக உறுதி செய்த பின்னரே கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, தள்ளுபடி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தேர்தல் ஆணையத்தின் விதிகளை நூறு சதவீதம் பின்பற்றியே அனைத்து வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.
வதந்திகள் மூலம் தொண்டர்களை குழப்பலாம் என்று நினைத்தவர்களின் முயற்சி தோல்வியடைந்துள்ளதை இது காட்டுகிறது. திராவிட கட்சிகள் காலம் காலமாக பின்பற்றி வரும் இந்த வதந்தி அரசியல் யுக்திகள், இந்த முறை விஜய்யிடம் வேலை செய்யாது என்று தவெகவினர் நம்புகின்றனர். விஜய்க்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை நேரடியாக சிதைக்க முடியாதவர்கள், இத்தகைய குறுக்கு வழிகளை கையாள்வது அவர்களின் பலவீனத்தையே காட்டுகிறது. களத்தில் மக்களை சந்திப்பதை விட, திரைக்கு பின்னால் வதந்திகளை உருவாக்குவதில் அவர்கள் அதிக கவனம் செலுத்துவது தவெகவிற்கு ஒரு மறைமுக வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தல் களத்தை மிக நேர்த்தியாகவும், சட்டப்பூர்வமாகவும் கையாண்டு வருவது அக்கட்சியின் முதிர்ச்சியை காட்டுகிறது. வதந்திகளை கடந்து, மக்களின் ஆதரவுடன் சட்டமன்றத்திற்குள் நுழையும் முனைப்பில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். திராவிட கட்சிகளின் விமர்சனங்களும், வதந்திகளும் விஜய்யின் அரசியல் வேகத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளதே தவிர, அவரை முடக்கவில்லை. வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு உண்மை நிலை வெளிவரும்போது, இந்த வதந்திகள் அனைத்தும் தானாகவே அடங்கிவிடும் என்ற அதீத நம்பிக்கையில் தவெகவினர் அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றனர்.
Author: Bala Siva

