வியட்நாம் நாட்டின் பாரம்பரிய உணவுப் பழக்கங்களில் ஒன்றாகக் கூறப்படும் உயிருடன் இருக்கும் பாம்பின் இதயத்தை பச்சையாக விழுங்கும் நடைமுறை மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் இதை நேரில் சுவைத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பல்வேறு கருத்துகளை கிளப்பியுள்ளது.
சுற்றுலாப் பயணி பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
வெளியான வீடியோவில், உயிருடன் இருந்த பாம்பிலிருந்து இதயம் பிரிக்கப்பட்ட பிறகும் அது தொடர்ந்து துடித்துக் கொண்டிருந்தது. பின்னர் அந்த இதயத்தை பயணி மெல்லாமல் நேரடியாக விழுங்கினார். அதன்பின் ஓட்கா மற்றும் தண்ணீர் குடித்த அவர், தனது உடலுக்குள் இன்னொரு இதயம் துடிப்பது போன்ற வித்தியாசமான உணர்வு ஏற்பட்டதாக அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
பாரம்பரிய நம்பிக்கையில் முக்கிய இடம்
தகவலின்படி, வியட்நாமின் சில பகுதிகளில் பாம்பின் இதயம், இரத்தம் உள்ளிட்டவை உடல் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கும் பாரம்பரிய உணவாக நம்பப்படுகின்றன. சில உணவகங்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்தவுடன் அவர்களது முன்னிலையிலேயே பாம்பு வெட்டப்பட்டு உணவு தயாரிக்கப்படுகிறது. இதயம் மட்டுமல்லாமல் இரத்தம், மாமிசம், பித்தப்பை மற்றும் எலும்புகளும் தனித்தனி உணவுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பாம்பு இதயம் மற்றும் இரத்தம் மதுவுடன் கலந்து பரிமாறப்படுவது அங்கு வழக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.
விலங்கு நல அமைப்புகள் எதிர்ப்பு
இந்த இதயம் இனிப்பு மற்றும் மாமிச சுவை கலந்ததாக இருப்பதாகவும், அதை மெல்லாமல் விழுங்குவதே அந்த உணவின் வழக்கமான முறையாகவும் கூறப்படுகிறது. வியட்நாம் மட்டுமின்றி சீனா, கொரியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளிலும் இதுபோன்ற பழக்கங்கள் காணப்பட்டாலும், வியட்நாமில்தான் இது அதிகம் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதையடுத்து, விலங்கு நல அமைப்புகள் இந்த நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தடை விதிக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், பல தலைமுறைகளாக தொடரும் பாரம்பரிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இதற்கு உடனடி தடை விதிப்பது எளிதல்ல என்று கூறப்படுகிறது.

