அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 13 வயது சிறுமி மேட்லைன் சோட்டோ கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்டீபன் ஸ்டெர்ன்ஸின் சிறை தொலைபேசி உரையாடல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆடியோ பதிவுகள் வழக்கில் புதிய கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணையும் நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சிறை உரையாடலில் வெளியான தகவல்கள்
2024 பிப்ரவரி மாதம் காணாமல் போன மேட்லைன் சோட்டோ பின்னர் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் சிறுமியின் தாய் ஜெனிஃபர் சோட்டோவின் காதலரான ஸ்டீபன் ஸ்டெர்ன்ஸ் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறையால் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல்களில், சம்பவம் நடந்த நாளில் தான் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்றும், உடனடியாக 911 அவசர சேவையை தொடர்புகொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் தனது பெற்றோரிடம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கில் உள்ள கடுமையான குற்றச்சாட்டுகள்
உரையாடலின் போது கொலையை நேரடியாக ஒப்புக்கொள்ளாத ஸ்டெர்ன்ஸ், அது ஒரு விபத்து எனக் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், உயிரிழந்த சிறுமிக்கு தன் மீது ஈர்ப்பு இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் ஒரே படுக்கையில்தான் உறங்குவது வழக்கம் என்றும் கூறியுள்ளார். மேலும், "என் மகள் பெரியவளானதும் என்னை விட்டுவிட்டு அவளுடன் போய்விடுவாயா?" என்று சிறுமியின் தாய் ஜெனிஃபர் தன்னிடம் நகைச்சுவையாகக் கேட்டதாகவும் ஸ்டெர்ன்ஸ் அந்த உரையாடலில் குறிப்பிட்டுள்ளார். அவரது கைப்பேசியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரங்களும் விசாரணையில் முக்கிய அம்சமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், சிறுமியின் தாய் மீது இதுவரை எந்த அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.
Murder Case விசாரணை 2027-ல் தொடக்கம்
ஸ்டீபன் ஸ்டெர்ன்ஸ் மீது Murder Case மற்றும் பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் உரையாடலில் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், உண்மை முழுமையாக வெளிவர வேண்டும் என்று அவரது தந்தையும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை 2027-ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

