ஆந்திரப் பிரதேசம்: உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய முக்கிய தீர்ப்பு, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவரது ஆட்சியில் பயனடைந்த பட்டியலின கிறிஸ்துவர்களுக்கும் பெரும் அரசியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சின்தடா ஆனந்த் என்ற கிறிஸ்துவ மத போதகர், தன்னை ஜாதி ரீதியில் துன்புறுத்திய ராமி ரெட்டி மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் மன்மோகன் அடங்கிய அமர்வு, 'ஹிந்து, சீக்கியர் அல்லது பவுத்த மதத்தைத் தவிர, பிற மதத்தினர் பட்டியலின அந்தஸ்து கோர முடியாது. மதம் மாறும்போது, அதுவரை அனுபவித்த பட்டியலின அந்தஸ்தை உடனடியாக இழப்பர். ஒரு நபர் பிற மதத்தைப் பின்பற்றும் அதே சமயத்தில் பட்டியலின சலுகைகளை கோர முடியாது' என்று தெளிவாகத் தீர்ப்பளித்தது.
இந்த அதிரடி தீர்ப்பு ஜெகன் மோகன் ரெட்டிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஜெகன் முதல்வராக இருந்தபோது கிறிஸ்துவ மதத்துக்கு அதிக முன்னுரிமை கொடுத்ததாகவும், மதமாற்றத்தை ஊக்குவித்ததாகவும் எதிர்க்கட்சிகளும் ஹிந்து அமைப்புகளும் குற்றம் சாட்டியிருந்தன. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்கள் குழுவில் கிறிஸ்துவரை நியமித்தது உள்ளிட்ட சர்ச்சைகளும் அப்போது வெடித்தன.

குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, கடப்பா, கர்னூல், அனந்தபூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பட்டியலின மக்களில் பெரும்பாலானோர் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் சலுகைகளுக்காக அலுவலக ரீதியாக ஹிந்துக்களாகவே தொடர்ந்தனர். இதனால் கிறிஸ்துவ மக்கள் தொகை அதிகாரப்பூர்வமாக பதிவாகவில்லை.
மேலும், தேர்தல் நெருங்கியபோது 8,400 கிறிஸ்துவ மதபோதகர்களுக்கு மாதம் 6,000 ரூபாய் கவுரவ ஊதியம் வழங்க ஜெகன் அரசு உத்தரவிட்டது. இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பட்டியலின அந்தஸ்து இழந்தவர்கள் மதபோதகர் ஊதியம் அல்லது SC சலுகை - இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.
ஆந்திராவில் மதமாற்றத்துக்கு சட்டப்பூர்வ தடை இல்லை என்றாலும், அரசு சலுகைகள் மதமாற்றத்துக்குப் பிறகும் தொடர்வதைத் தடுக்க தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்த முயற்சிக்கு வலு சேர்த்துள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு இந்த தீர்ப்பு பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. பட்டியலின கிறிஸ்துவர்கள் மற்றும் மதபோதகர்களுக்கு இனி பல சலுகைகள் கிடைப்பது சிக்கலாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம்: உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய முக்கிய தீர்ப்பு, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவரது ஆட்சியில் பயனடைந்த பட்டியலின கிறிஸ்துவர்களுக்கும் பெரும் அரசியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

