உடுப்பியில் 30 வயதான இளம் தொழிலதிபர் சுதீப், திருமணமான 12 நாட்களிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூரைச் சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சவுமியா என்பவரை காதலித்து கடந்த பிப்ரவரி 17-ம் தேதி சுதீப் திருமணம் செய்துள்ளார். இது சவுமியாவுக்கு நான்காவது திருமணம் என்பதால், சுதீப்பின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுதீப் கடந்த மாதம் விஷம் குடித்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சுதீப்பின் மரணத்திற்குப் பிறகு அவரது தந்தை தாமோதர், கார்கலா நகர போலீஸ் நிலையத்தில் சவுமியா மீது புகார் அளித்துள்ளார். தனது மகனின் தற்கொலைக்கு சவுமியா கொடுத்த தொடர் மன அழுத்தமே காரணம் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, சுதீப் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய போதும், அவர் இறந்த செய்தி தெரிந்த பிறகும் சவுமியா நேரில் வந்து பார்க்கவில்லை என்பது குடும்பத்தினர் மத்தியில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் சவுமியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த சவுமியா, தான் எதையும் மறைக்கவில்லை என்று கூறியுள்ளார். “நாங்கள் ஓராண்டாக காதலித்து வந்தோம்; எனது கடந்த கால வாழ்க்கை குறித்து சுதீப்பிற்கு முன்பே தெரியும். அவர் விருப்பப்படிதான் திருமணம் நடந்தது” என்று கூறிய அவர், சுதீப்பின் தற்கொலைக்கு அவரது குடும்பத்தினர் காட்டிய எதிர்ப்பே காரணம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தன் மீது வீண் பழி சுமத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் சவுமியா விளக்கமளித்துள்ளார்.
இதற்கிடையில், முல்கியைச் சேர்ந்த வேணு ஷெட்டி என்பவர் சவுமியா குறித்து புதிய புகாரை முன்வைத்துள்ளது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுமியா 19 வயதிலேயே முதல் திருமணத்தை முடித்தவர் என்றும், ஆண்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதே அவரது நோக்கம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தானும் சவுமியாவால் ஏமாற்றப்பட்டதாகவும், திருமண நிச்சயதார்த்தம் வரை சென்ற பிறகு அவரது உண்மை முகம் தெரிந்து தப்பித்ததாகவும் வேணு ஷெட்டி கூறியுள்ளார். அடுத்தடுத்து வெளியாகும் இந்த திடுக்கிடும் தகவல்களால் உடுப்பி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

