அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான தனபால், கட்சித் தலைமை மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் போட்டியிட அவிநாசி தொகுதியில் விருப்பமனு அளித்திருந்தும், கட்சித் தலைமை தன்னை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை என்றும், தேர்தலில் போட்டியிட விருப்பமா என்று கூட யாரும் தன்னிடம் கேட்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக 18 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியபோது, சபாநாயகராக இருந்து அவர்களைத் தகுதி நீக்கம் செய்து, ஆட்சியைத் தக்கவைக்கத் தான் ஆற்றிய முக்கியப் பங்கை அவர் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் முதலமைச்சர் நாற்காலியைக் காப்பாற்றிக் கொடுத்த தனக்கே தற்போது கட்சியில் உரிய மரியாதை இல்லை என்பது மிகுந்த மனவேதனையை அளிப்பதாகத் தனபால் கூறியுள்ளார். “ஆட்சியைத் தூக்கிப் பிடித்த எனக்குக் கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை” என்று அவர் ஊடகங்களிடம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தேர்தலுக்குச் சில நாட்களே உள்ள நிலையில், கட்சியின் விசுவாசமிக்க மூத்த நிர்வாகிகள் இவ்வாறு அதிருப்தி அடைவது அதிமுகவின் தேர்தல் வியூகங்களுக்குப் பின்னடைவாக அமையக்கூடும் எனக் கருதப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் பிடிக்குள் இருக்கும் அதிமுகவில், பழைய விசுவாசிகள் ஓரங்கட்டப்படுவதாக எழும் இந்தப் புகார், தொண்டர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.

