அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேசும்போது, ஈரானின் ராணுவ வலிமை ஏற்கனவே சிதைக்கப்பட்டுவிட்டதாகவும், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் ஈரானின் முக்கியப் பகுதிகள் மீது கடுமையானத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
“ஈரான் மீண்டும் கற்காலத்திற்குச் செல்லும்” என்று டிரம்ப் விடுத்த இந்த மிரட்டல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானிய புரட்சிகரக் காவல்படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் சையத் மஜித் மூசாவி பேசுகையில், “வெறும் 250 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட அமெரிக்கா, 6,000 ஆண்டுகளுக்கு மேலான நாகரிகத்தைக் கொண்ட ஈரானை மிரட்டுகிறது. ஹாலிவுட் பிரமைகள் உங்கள் மனதைப் பாதித்துள்ளன” என்று சாடினார். அமெரிக்காவின் தவறான கணிப்புகள் அந்த நாட்டையே புதைகுழிக்குள் தள்ளும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நாங்கள் 7,000 ஆண்டுகால நாகரிகப் பாரம்பரியம் கொண்ட தேசம்; உங்கள் குண்டுவீச்சுகளால் எங்களைக் கற்காலத்திற்குத் தள்ள முடியாது. மாறாக, குழந்தைகளைக் கொல்வதையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் கற்காலத்திலிருந்து நவீன உலகிற்குச் சுமந்து வந்தவர்கள் நீங்களே” என்று அமெரிக்காவைக் கடுமையாக விமர்சித்துள்ளது. ஈரானின் இந்தத் துணிச்சலான பதில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

