உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள நாலெட்ஜ் பார்க் பகுதியில், 15 வயதுடைய காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிப் பள்ளிச் சிறுமியைப் பின்தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்து வந்த 26 வயதான பள்ளி பேருந்து ஓட்டுநர் லவ் குஷ் என்பவரைப் போலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக அம்மாணவி மீரட்டிற்குப் பயணம் செய்தபோது இந்தத் தொந்தரவு தொடங்கத் தொடங்கியுள்ளது. பேருந்து ஓட்டுநர் லவ் குஷ், பேருந்தின் கண்ணாடி வழியாக ஆபாசச் சைகைகள் செய்து, தனது தொலைபேசி எண்ணை எழுதிக் கொடுத்துத் தொந்தரவு செய்துள்ளார். மேலும், பலமுறை தொலைபேசியில் அழைத்தும், அருவருப்பான சைகைகள் காட்டியும் அச்சுறுத்தி வந்துள்ளான். பயத்தின் காரணமாகச் சிறுமி இதை உடனடியாக வெளியே தெரிவிக்காத நிலையில், ஜூலை 28 அன்று தனது தோழியுடன் சேர்ந்து பள்ளி அதிகாரிகளிடம் புகார் அளித்த பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் அந்த ஓட்டுநரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ததுடன், சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த தகவலின்படி, ஓட்டுநர் சிறுமியைத் தவறாகத் தொட்டு அச்சுறுத்தியது உறுதியானது. தற்போது காவல்துறையினர் அவர் மீது பிஎன்எஸ், போக்சோ மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் பள்ளி நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஓட்டுநருக்குச் சிறுமியின் தொலைபேசி எண் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

