ஈரானின் இரண்டு மிகப்பெரிய எஃகு ஆலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய இலக்குகளைக் குறிவைத்து இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தாக்குதல் நடத்தியதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் குறிப்பாக அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களான துபாயில் உள்ள 'ஆரக்கிள்' (Oracle) மற்றும் பஹ்ரைனில் உள்ள 'அமேசான்' (Amazon) ஆகிய நிறுவனங்களின் தரவு மையங்கள் (Data Centres) குறிவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர, அபுதாபியில் உள்ள அமெரிக்க எஃகு தொழிற்சாலைகள், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க அலுமினிய தொழிற்சாலைகள் மற்றும் இஸ்ரேலின் ரஃபேல் ஆயுதத் தொழிற்சாலைகள் ஆகியவையும் ஈரானின் இலக்குகளில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஸ்னிம் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, அமெரிக்காவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளைச் சிதைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஈரானிய எஃகுத் தொழிற்சாலைகள் மீதான தாக்குதலுக்கு இது ஒரு நேரடிப் பதிலடி என்றும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் சியோனிச ஆதிக்கத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும் ஈரானிய ராணுவம் குறிப்பிட்டுள்ளது. இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

