தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பல தசாப்தங்களாகத் தொடர்ந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியவில்லை. இந்த இக்கட்டான சூழலில், தவெக-வுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முன்வந்துள்ளதும், திமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளதும் தமிழக அரசியலில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விரிசலுக்கான விதைகள் தொகுதிப் பங்கீட்டின் போதே தூவப்பட்டன. காங்கிரஸ் 40 தொகுதிகளையும் தமிழக அமைச்சரவையில் பங்கையும் கேட்டபோது, திமுக வெறும் 28 இடங்களை மட்டுமே ஒதுக்கி, “அதிகாரத்தில் பங்கு இல்லை” என்று கறாராக மறுத்தது. இது ராகுல் காந்தி மற்றும் டெல்லி தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர் தவெக-வுடன் கைகோர்க்குமாறு ராகுல் காந்திக்குத் தொடர் அழுத்தம் கொடுத்து வந்தனர். இதன் வெளிப்பாடாகவே, தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலினுடன் ராகுல் காந்தி மேடை பகிராதது, அப்போதே கூட்டணியில் விரிசல் இருப்பதை உறுதிப்படுத்தியது.
1967-க்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வகிக்காத காங்கிரஸுக்கு, சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின் இது ஒரு பொற்கால வாய்ப்பாக அமைந்துள்ளது. திமுகவின் நிழலில் இருந்து வெளியேறி, தனது கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த இதுவே சரியான நேரம் என்று ராகுல் காந்தி கருதுகிறார். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்பே, விஜய்க்கு போன் செய்து வாழ்த்துத் தெரிவித்த ராகுல் காந்தி, “எந்தச் சூழலிலும் காங்கிரஸ் உங்களுக்குத் துணையாக இருக்கும்” என உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஒரு போன் கால் தான் தற்போது தவெக – காங்கிரஸ் கூட்டணிக்கு அஸ்திவாரமாக மாறியிருக்கிறது.
தற்போது தவெக-வின் 108 இடங்களுடன் காங்கிரஸின் 5 இடங்களும் சேரும்போது பலம் 113-ஆக உயர்ந்துள்ளது. “மதவாத சக்திகளைத் தள்ளி வைக்க வேண்டும்” என்ற ஒற்றை நிபந்தனையுடன் காங்கிரஸ் இந்த ஆதரவை வழங்கியுள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 5 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், மற்ற சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் விஜய் தீவிரமாக இறங்கியுள்ளார். தமிழக அரசியலில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமையப்போகும் சூழல் உருவாகியிருப்பது, வரும் நாட்களில் இன்னும் பல அதிரடி மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

