தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக, அதிமுகவைச் சேர்ந்த சி.
விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 முக்கிய எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். முதல்வர் விஜய் ஏற்கனவே ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 7 இடங்கள் காலியாக உள்ளன. ஆனால், கடந்த ஜூலை 2, 2026 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இடைத்தேர்தல் அறிவிப்பில் பீகார், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தொகுதிகள் மட்டுமே இடம்பெற்றன. ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் உற்று நோக்க வைத்த தமிழகத்தின் 7 காலி இடங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில்தான், இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுகவின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் ஏ.வ.வேலு ஆகியோர் கடந்த மூன்று வாரங்களாகக் கடுமையாக வலியுறுத்தி வருகின்றனர். தங்களது தலைவர் மீண்டும் சட்டப்பேரவைக்குள் கம்பீரமாக நுழைய வேண்டும் என்பதே இவர்களின் பிரதான விருப்பமாக உள்ளது. அதேநேரம், ஸ்டாலினின் மனைவி துர்கா அம்மையாரோ, திருச்சி கிழக்கைத் தவிர்த்துவிட்டு, திருவாரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவை ராஜினாமா செய்ய வைத்து, தங்களின் சொந்த மண்ணான திருவாரூரிலேயே ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று தனது கணவரிடம் சமீப நாட்களாக விருப்பம் தெரிவித்து வருகிறார்.
மறுபுறம், இந்தத் தேர்தலில் ஸ்டாலின் போட்டியிடுவதை அவரது மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முற்றிலும் எதிர்ப்பதாகத் தெரிகிறது. கடந்த 4-ஆம் தேதி ஸ்டாலின் தம்பதியினர் லண்டன் புறப்படுவதற்கு முன்பாக இல்லத்தில் நடந்த ஆலோசனையில், உதயநிதி தனது தந்தையிடம் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். “தற்போதைய சட்டப்பேரவை சூழல் ஆரோக்கியமாக இல்லை; நீங்கள் மீண்டும் பேரவைக்குள் வந்தால் உங்களை அவமானப்படுத்த ஆளும் தரப்பு முயலும். அதற்கு நம் கட்சியினர் எதிர்வினை ஆற்றினால், அதை வைத்தே இந்த ‘ரீல்ஸ் ஆட்சி’ திமுக மீது பழிபோட்டு அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கும். எனவே, நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் இந்தத் தேர்தலைத் தவிர்ப்பதே நல்லது” என்று உதயநிதி நிதானமாக எடுத்துரைத்துள்ளார்.
மகன் உதயநிதியின் இந்த அரசியல் கணக்கும், எச்சரிக்கையான யோசனையும்தான் தற்போது ஸ்டாலின் தம்பதியினரின் மனதிலும் ஓடிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சபாநாயகரின் வேகமான நடவடிக்கை, தேர்தல் ஆணையத்தின் திடீர் மௌனம் எனப் பல்வேறு பின்னணிகளுக்கு மத்தியில், தமிழகத்திற்கான இடைத்தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறதோ, அன்றுதான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் களத்தில் போட்டியிடுகிறாரா அல்லது அதைத் தவிர்க்கிறாரா என்பது குறித்த இறுதி முடிவு அறிவாலயத் தரப்பிலிருந்து உறுதியாகத் தெரியவரும்.

