2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், அர்ஜென்டினா மற்றும் எகிப்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
களத்தில் நிலவிய விஏஆர் முடிவுகள் ஒருபுறம் விவாதப் பொருளாக மாற, மறுபுறம் மைதானத்தின் கேலரியில் அரங்கேறிய மிக மோசமான இனவெறித் தாக்குதல் ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் தலைகுனிய வைத்துள்ளது. இப்போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய போதிலும், அர்ஜென்டினா ரசிகர்களின் அநாகரிகமான சில செயல்பாடுகள் உலகளவில் கடும் கண்டனங்களை எதிர்கொண்டு வருகின்றன.
சர்வதேச அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட பிரபல அமெரிக்க யூடியூபரும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான ஐஷோஸ்பீட் இப்போட்டியின் போது அர்ஜென்டினா ரசிகர்களால் கடுமையான இனவெறிப் கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகரான இவர், வழக்கமாக லியோனல் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணிக்கு எதிராக ஜாலியாக நேரலை செய்வது வழக்கம். அந்த வகையில், நேற்றைய ஆட்டத்தில் எகிப்து அணிக்கு ஆதரவாக மைதானத்தில் அமர்ந்து ஸ்பீட் நேரலை செய்து கொண்டிருந்தபோது இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியபோது, அங்கு அர்ஜென்டினா ஜெர்சி அணிந்திருந்த ரசிகர் ஒருவர், கருப்பினத்தவரான ஸ்பீடை நோக்கி குரங்கு போல சைகை செய்து அநாகரிகமாக நடந்துகொண்டார். அதுமட்டுமின்றி, அர்ஜென்டினா ரசிகர்கள் சிலர் ஸ்பானிஷ் மொழியில், “குரங்குகள் வாழும் மிருகக்காட்சி சாலைக்கு (Zoo) சென்று அழு” என்று இனவெறி வார்த்தைகளைப் பயன்படுத்தி முழக்கமிட்டுள்ளனர். இந்த ஒட்டுமொத்த கசப்பான காட்சியும் ஸ்பீடின் நேரலை கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி நெட்டிசன்களின் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் புயலைக் கிளப்பியதை அடுத்து, பன்னாட்டு கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா உடனடியாக இதில் தலையிட்டுள்ளது. இதுகுறித்து ஃபிஃபா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், கால்பந்து விளையாட்டிலோ, உலகக்கோப்பை மைதானங்களிலோ அல்லது இந்தச் சமூகத்திலோ இனவெறி, வெறுப்பு மற்றும் பாகுபாடுகளுக்கு எவ்வித இடமும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், உலகக்கோப்பை என்பது பரஸ்பர மரியாதையின் அடையாளம் என்றும், அதை சீர்குலைக்கும் எந்தவொரு செயலையும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் ஃபிஃபா எச்சரித்துள்ளது.

