உத்தரப் பிரதேசத்தில், சமூக ஊடகம் வழியாக ஏற்பட்ட பழக்கத்தால் திருமணமான 38 வயதுப் பெண் ரேஷ்மா கான், தனது கள்ளக்காதலனான குஜராத்தைச் சேர்ந்த ஹேமல் கக்காரியா என்ற திலீப்பால் (42) கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான ரேஷ்மாவிற்கு, மதியாஹு பகுதியில் தங்கியிருந்த கக்காரியா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு, ரேஷ்மா தனது குடும்பத்தினரைத் தவிர்த்துவிட்டு பெரும்பாலான நேரத்தை கக்காரியாவுடன் செலவிடத் தொடங்கியுள்ளார்.
கடந்த ஜூலை 4 அன்று ரேஷ்மா, கக்காரியாவின் வாடகை வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவரது மொபைல் சாட் தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கக்காரியா ரேஷ்மாவின் கைபேசியைச் சோதிக்கக் கோரியதை அவர் மறுத்ததால், ஆத்திரமடைந்த கக்காரியா ரேஷ்மாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர், யாருக்கும் சந்தேகம் வராதவாறு உடலை மறைக்கத் திட்டமிட்டு, சந்தையிலிருந்து கசாப்புக் கத்தி மற்றும் கருப்பு பிளாஸ்டிக் பைகளை வாங்கி வந்து, உடலை துண்டு துண்டாக வெட்டி தனித்தனி பைகளில் அடைத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை ராணிபூர் புறவழிச்சாலை அருகே புதரில் கிடந்த பெண்ணின் சிதைக்கப்பட்ட உடற்பகுதியை மீட்ட காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். மீதமுள்ள உடல் பாகங்களை அப்புறப்படுத்த முயன்ற கக்காரியாவை ராம்நகர் வட்டார நுழைவாயில் அருகே காவல்துறையினர் வளைத்துப் பிடித்தனர். அப்போது தப்பியோட முயன்று அவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்குப் பதிலடியாக காவல்துறையினர் நடத்திய தற்காப்புத் தாக்குதலில் காயமடைந்த கக்காரியா நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

