வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்தபோது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீதும், அவரது தந்தையான அமைச்சர் துரைமுருகன் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
வேட்புமனு தாக்கலின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் கூடியதுடன், தடையை மீறி பட்டாசுகளை வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியது, அரசு உத்தரவை மீறியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் இத்தகைய சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

