தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் வீடுகள் மற்றும் கட்சி அலுவலகத்திற்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை நீலாங்கரை மற்றும் பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீடுகள் மற்றும் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம் ஆகியவற்றிற்குச் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தவெக-விற்குச் சாதகமாகத் தொடர்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, தவெக 85 தொகுதிகளிலும், அதிமுக 66 தொகுதிகளிலும், ஆளும் திமுக 50 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. திராவிடக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி தவெக முன்னணியில் இருப்பதால், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமடைந்து அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு விஜய் வீட்டிற்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முதல் தேர்தலிலேயே விஜய் தலைமையிலான கட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

