ரஷ்யாவின் அதிரடி கட்டுப்பாடுகள் மற்றும் துருக்கியின் தொடர் விற்பனை காரணமாக, சர்வதேச தங்கச் சந்தை அடுத்த சில வாரங்களில் கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க உள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய தங்கம் உற்பத்தி நாடான ரஷ்யா, மே 1 முதல் தனது தங்க ஏற்றுமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை சந்தையில் தங்கத்திற்கான தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை ‘ராக்கெட்’ வேகத்தில் உயர்த்தக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மறுபுறம், உலகின் டாப் 10 தங்க கையிருப்பு நாடுகளில் ஒன்றான துருக்கி, தனது பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 120 டன் தங்கத்தை விற்றுள்ளது.
துருக்கியின் இந்த அதிரடி தங்க விற்பனைக்கு அந்நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் சுமையும், லிரா நாணயத்தின் வீழ்ச்சியுமே முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. துருக்கி மத்திய வங்கி ‘கோல்ட் ஸ்வாப்’ (தங்க அடமானம்) மற்றும் ‘அவுட்ரைட் செல்லிங்’ (நேரடி விற்பனை) ஆகிய இரு முறைகளில் தனது கையிருப்பைக் குறைத்து வருகிறது. குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் அந்நாட்டின் தங்க கையிருப்பு 480 டன்னாக சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையைச் சமன் செய்யவும், திவால் நிலையைத் தவிர்க்கவும் தங்கம் ஒரு கடைசி ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது அமெரிக்கா – ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தத்தால் கச்சா எண்ணெய் விலை 15-16 சதவீதம் சரிந்துள்ளது, இது துருக்கிக்கு சற்றே நிம்மதியளிக்கும் செய்தியாகும். இருப்பினும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதால், ஹார்மூஸ் வழித்தடத்தை மூடிவிடுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் மீண்டும் போர் பதற்றம் உருவாகி, கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது. இத்தகைய முரண்பட்ட உலகளாவிய சூழல்களால், தங்கத்தின் விலை வரும் நாட்களில் ஒரு நிலையற்ற தன்மையிலேயே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

