தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தவெக மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது.
சமீபத்தில் கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ கனிமொழி, 2029-ஆம் ஆண்டில் விஜய்தான் அடுத்த பிரதமர் என்றும், ராகுல் காந்தியே அவரைப் பிரதமராக அமர வைப்பார் என்றும் கூறியிருந்தார். இதற்கு உடனடியாகப் பதிலளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட், ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என்றும் தவெகவினர் இன்னும் ரசிகர் மனநிலையிலேயே இருக்கிறார்கள் என்றும் விமர்சித்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக பொருளாளரும் உணவுத்துறை அமைச்சருமான வெங்கடரமணன் இதற்குக் விளக்கமளித்தார். தவெக எம்.எல்.ஏ-க்கள் விஜய்யைப் பிரதமர் எனப் பேசுவது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றும், அது அவர்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே என்றும் கூறினார். முதல்வர் விஜய்யோ, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தோ அல்லது அமைச்சர்களோ இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கவில்லை என்றும், எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தலைவர் மீது கொண்ட அபரிமிதமான அன்பினாலும் ஆசையினாலும் இவ்வாறு பேசுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஊழலற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான ஆட்சியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் எம்.எல்.ஏ-க்கள் இவ்வாறு விரும்புவதாகத் தெரிவித்த அமைச்சர், தேசிய அளவிலான செயல்பாடுகள் குறித்து வரும் காலங்களில் முதல்வரோடும் பொதுச்செயலாளரோடும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார். மேலும், 2029 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் நிறையக் காலம் இருப்பதால், பிரதமர் வேட்பாளர் குறித்துத் தகுந்த நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என மழுப்பலாகப் பதிலளித்துச் சென்றார்.
முன்னதாக, ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம் என காங்கிரஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும், மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கூட்டணிக்குள் மீண்டும் வெடித்துள்ள இந்த பிரதமர் வேட்பாளர் விவாதம், தவெக – காங்கிரஸ் இடையிலான உறவில் தொடர் உராய்வை ஏற்படுத்தி வருகிறது.

