தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குதிரை பேர வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் புகாரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் (FIR) தனது பெயர் இடம்பெறாத நிலையிலும், அரசியல் காரணங்களுக்காகவே இந்த விவகாரத்தில் தன்னை வலுக்கட்டாயமாக சிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக செந்தில் பாலாஜி தனது மனுவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை தான் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ள செந்தில் பாலாஜி, அவருடன் தொலைபேசியில் பேசியதற்கோ, குறுஞ்செய்தி அனுப்பியதற்கோ, நேரில் சந்தித்ததற்கோ அல்லது பணம் கொடுத்து மிரட்டல் விடுத்ததற்கோ எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்று வாதிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு, தன்னையும் தனது சகோதரரையும் தொடர்புபடுத்தி வாக்குமூலம் அளிக்குமாறு காவல்துறை தரப்பில் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், கட்டாய விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, “இன்னும் பல கணக்குகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன” எனப் பேசியுள்ள கருத்துக்களைத் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள செந்தில் பாலாஜி, இது அரசியல் பழிவாங்கல் குறித்த தனது அச்சத்தை மேலும் வலுப்படுத்துவதாகக் கூறியுள்ளார். குறிப்பாக, கரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தற்போதைய சூழலில், தன்னை கரூர் துயர வழக்குடனும், இந்த குதிரை பேர குற்றச்சாட்டுகளுடனும் திட்டமிட்டு இணைத்து, அரசியல் ரீதியாக முடக்கவும், பாதிக்க வைக்கவும் தீவிர முயற்சிகள் பின்னணியில் நடைபெற்று வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வரும் தான், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் அவர் உறுதியளித்துள்ளார். தான் தலைமறைவாகவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ வாய்ப்பில்லை என்பதால், விசாரணை அதிகாரிகள் அழைக்கும் போதெல்லாம் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும், நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு கடுமையான நிபந்தனைகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுத் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இந்த பரபரப்பான முன் ஜாமீன் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

