நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது.
விவாகரத்து அறிவிப்பைத் தொடர்ந்து பாடகி கெனிஷாவுடன் அவர் இணைந்து பொதுவெளியில் தோன்றியது பல்வேறு யூகங்களை கிளப்பியது. ஆனால், அண்மையில் கெனிஷா தன்னை விட்டு பிரிந்துவிட்டதாக அறிவித்ததால் அதிர்ச்சியடைந்த ரவி, “விவாகரத்து பெறும் வரை என் நடிப்பில் படங்கள் வெளியாகாது” என எமோஷனலாக அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட ஜெயம் ரவி, மேடையில் மண்டியிட்டு ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தனக்கு 46 வயது ஆகப்போவதாகவும், அதில் பாதி வாழ்க்கையை (23 வருடங்கள்) சினிமாவுக்காகவே அர்ப்பணித்துள்ளதாகவும் உருக்கமாகக் குறிப்பிட்டார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்களால் சற்று உணர்ச்சிவசப்பட்டு, சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக தவறான முடிவை அறிவித்துவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார்.
திரையுலகினரும் ரசிகர்களும் தனக்கு அளித்த பேராதரவே இந்த முடிவை மாற்றிக்கொள்ளக் காரணம் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். “நீ எதை வேணாலும் சொல், ஆனால் சினிமாவில் இருக்க மாட்டேன் என்று மட்டும் சொல்லாதே” என்று சினிமா துறையினர் தனக்கு அறிவுறுத்தியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டதாகக் கூறிய அவர், தனக்கு அன்பளித்த ரசிகர்களுக்கும் சினிமாவுக்கும் எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன் என்று மேடையில் உறுதியளித்தார்.
மேலும், தான் மனமுடைந்து போகாமல் மீண்டும் ‘கராத்தே பாபு’வாக (அவரது அடுத்த படக் கதாபாத்திரம்) வீரியத்துடன் திரைக்குத் திரும்பி வருவதாக நம்பிக்கையூட்டினார். தான் சந்தித்த மனப் போராட்டங்களை வெளிப்படையாகப் பேசியதன் மூலம், சமூகத்தில் பலரும் ‘மனநலன்’ (Mental Health) குறித்து பேசத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இன்று தான் சிரித்துக்கொண்டு சந்தோஷமாக இருப்பதற்கு ரசிகர்களின் எல்லையற்ற அன்புதான் காரணம் என்றும் ஜெயம் ரவி நெகிழ்ந்து பேசினார்.

