அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் தற்போது பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. கோபியில் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த தலைவர் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பணம் கட்டிய பலருக்கு, சீட் வழங்காமல் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக அவர் தெரிவித்தார். இதனால் கட்சிக்குள் அதிருப்தியில் உள்ள பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரைவில் மாற்று முகாமிற்கு செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், இது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.கே.செல்வராஜை செங்கோட்டையன் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “என்னை நடுத்தெருவில் நிறுத்துவேன் என்று சபதமேற்ற ஏ.கே.செல்வராஜ், இன்று சீட் கிடைக்காமல் அவரே நடுத்தெருவில் நிற்கிறார்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிகளும், சீனியர் நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததும் அதிமுகவிற்குள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதை செங்கோட்டையனின் இந்தப் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

