விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவரை மனைவியே கத்தியால் குத்திக்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மணிக்கும், அவரது மனைவி திவ்யபாரதிக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. மணியின் மதுப்பழக்கத்தாலும், மனைவியின் நடத்தையில் அவருக்கு இருந்த சந்தேகத்தாலும் தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு இருவருக்குள்ளும் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த திவ்யபாரதி கணவரை கழிவறைக்குள் தள்ளிவிட்டு, வீட்டில் இருந்த கத்தியால் அவரது தலை, தொடை மற்றும் மர்ம உறுப்பில் கொடூரமாகக் குத்தியுள்ளார். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடக்கத்தில், சண்டையின் போது தான் தள்ளிவிட்டதில் கணவர் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாகக் கூறி திவ்யபாரதி நாடகமாடினார். ஆனால், மணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய சாத்தூர் தாலுகா போலீஸார், பெண்ணின் முன்னுக்குப் பின் முரணான பேச்சால் சந்தேகமடைந்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், திவ்யபாரதி தன் கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, இந்தச் சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்த காவல்துறையினர், திவ்யபாரதியைக் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

