Dailyhunt
"இலவசங்கள் ஒரு ஏமாற்று வேலை!". ஆட்சி சரியில்லை.. அப்புறம் யாரு ஓட்டுப் போடுறா?". திமுக அரசை வறுத்தெடுத்த சீமான்.!!

"இலவசங்கள் ஒரு ஏமாற்று வேலை!". ஆட்சி சரியில்லை.. அப்புறம் யாரு ஓட்டுப் போடுறா?". திமுக அரசை வறுத்தெடுத்த சீமான்.!!

Tamizhan media 1 week ago

பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்துவதற்கு முன்னால், வீட்டில் இருக்கும் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் முகங்களைப் பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். எந்தச் சின்னத்திற்கு வாக்களித்தால் வரும் காலங்களில் தங்களது குழந்தைகளுக்குத் தரமான கல்வி, மேம்பட்ட மருத்துவம் மற்றும் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதைச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மற்ற நாடுகளில் போக்குவரத்து, கட்டமைப்பு மற்றும் கழிவு மேலாண்மை மிகச் சிறப்பாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய சீமான், வளமான இயற்கை வளங்களைக் கொண்ட நம் நாட்டில் மட்டும் ஏன் அத்தகைய நிலை இல்லை என்று கேள்வி எழுப்பினார். பாலைவனமாக இருந்த அரபு நாடுகளுக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் வேலை தேடிச் செல்லும் அவலநிலை நீடிப்பதை விமர்சித்த அவர், தமிழ்நாட்டிலேயே வடமாநிலத்தவர்கள் வந்து வேலை செய்யும் அளவிற்கு வாய்ப்புகள் இருக்கும்போது, நம் இளைஞர்களுக்கு மட்டும் ஏன் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது என்று சாடினார்.

மக்களை உழைப்பிலிருந்து வெளியேற்றும் வகையில் ஆட்சியாளர்கள் நுட்பமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், வேளாண்மை உள்ளிட்ட அடிப்படைத் தொழில்களை இழிவானது என நினைக்க வைத்துவிட்டதாகத் தெரிவித்தார். இலவச அரிசி, பருப்பு மற்றும் ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுவதாகவும், தமிழகத்தில் மட்டும் சுமார் 70 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பதாகவும் கூறினார். கல்வி, குடிநீர், சாலை போன்ற மக்கள் சேவைகளைத் தனியார் லாபத்திற்காக விட்டுவிட்டு, அரசிடம் டாஸ்மாக் மட்டுமே மிச்சமிருப்பதாக அவர் ஆட்சியாளர்களை விமர்சித்தார்.

இலவசங்களையும் வெற்று அறிவிப்புகளையும் தரும் ஏமாற்று ஆட்சி தொடர்ந்து தேர்வு செய்வதுதான் சிக்கல் என்று குறிப்பிட்ட சீமான், ஆட்சி சரியில்லை என்று சொல்லிக்கொண்டே மீண்டும் அவர்களுக்கே வாக்களிப்பதையும் சுட்டிக்காட்டினார். ஆரம்பத்தில் 1.1% வாக்குகளுடன் தொடங்கி இன்று தனித்துப் போட்டியிட்டு 8.5% வாக்குகளைப் பெற்றுள்ளதை நினைவுகூர்ந்த அவர், நாம் சாப்பிடும் உணவைத் தரும் விவசாயியின் சின்னமான ‘விவசாயி’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்யத் துணிச்சலான முடிவை எடுக்க வேண்டிய தருணம் இதுவென அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media