2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு திமுக தனது தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளைக் கவரும் வகையில் ‘இல்லத்தரசி கூப்பன்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு தலா 8,000 ரூபாய் மதிப்புள்ள ஒருமுறை பயன்பாட்டு கூப்பன் வழங்கப்படும்.
இக்கூப்பனைப் பயன்படுத்தி மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், எல்.இ.டி டிவி, மைக்ரோவேவ் அவன் மற்றும் இண்டக்ஷன் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தேர்தலின் ‘கதாநாயகி’ என்று வர்ணித்துள்ளார்.
இந்தக் கூப்பன்கள் எங்கே கிடைக்கும் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை தேர்தல் வெற்றிக்குப் பிறகே வெளியாகும். இருப்பினும், தற்போதுள்ள மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைப் போலவே, இதுவும் ரேஷன் கடைகள் மூலமாகவோ அல்லது சிறப்பு முகாம்கள் மூலமாகவோ விநியோகிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் பழைய மின்சாதனப் பொருட்களை மாற்ற விரும்புபவர்களுக்கும், புதிய பொருட்கள் வாங்கத் திட்டமிடும் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பப் பெண்களுக்கும் இந்த 8,000 ரூபாய் கூப்பன் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்துவது போன்ற கூடுதல் வாக்குறுதிகளையும் திமுக தனது அறிக்கையில் முன்னிறுத்தியுள்ளது.

