மாலத்தீவு சந்தித்து வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க, இந்தியாவிடம் இருந்து அவசர உதவியாக எரிபொருளைப் பெறுவதற்கு அந்த நாடு தற்போது பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.
குறிப்பாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், தனது அண்டை நாடான இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்வதன் மூலம் தனது நாட்டின் எரிசக்தி தேவையை உறுதிப்படுத்த மாலத்தீவு அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவிடமிருந்து அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி அனுமதியை மாலத்தீவு பெற்றுள்ள நிலையில், இந்த புதிய கோரிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் மாலத்தீவின் பொருளாதார நிலை மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை ஏற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியாவிலிருந்து சலுகை விலையில் அல்லது நீண்ட கால கடன் அடிப்படையில் எரிபொருளைப் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதனால் முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே சில அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் நிலவிய போதிலும், பேரிடர் மற்றும் இக்கட்டான காலங்களில் மாலத்தீவுக்கு முதலில் உதவும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. தற்போது நிலவி வரும் போர் சூழலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க இந்தியாவின் இந்த உதவி மாலத்தீவுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

