இந்தியாவில் திருமணக் கொண்டாட்டங்கள் என்றாலே உற்சாகத்திற்கும் ஆடல் பாடல்களுக்கும் பஞ்சமிருக்காது. அந்த வகையில், ஒரு குடும்பத்தினர் திருமண விழாவிற்காக ரெயில் பெட்டி ஒன்றினை முழுமையாக முன்பதிவு செய்து, அதில் உறவினர்களுடன் இணைந்து கொண்டாட்டமாகப் பயணிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த ரெயில் பெட்டியில், மணப்பெண் கேக் வெட்ட, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேளதாளங்களுக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர். டிக்கெட் பரிசோதகர் கூட இந்த மகிழ்ச்சியான சூழலில் இணைந்து புன்னகையுடன் காணப்பட்டார்.
இந்த வீடியோ இணையவாசிகளிடையே இருவேறு கருத்துக்களைப் பெற்றுள்ளது. ஒரு தரப்பினர், குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி இவ்வளவு பிரமாண்டமாகப் பயணிப்பது மகிழ்ச்சியளிப்பதாகப் பாராட்டியுள்ளனர். அதே சமயம், இதுபோன்ற கொண்டாட்டங்கள் மற்ற பயணிகளுக்கு இடையூறாக அமையக்கூடும் எனச் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உண்மையில், இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி விதிமுறைப்படி, ஒரு முழு ரெயிலையோ அல்லது குறிப்பிட்ட பெட்டிகளையோ முன்கூட்டியே கட்டணம் செலுத்தி அதிகாரப்பூர்வமாக முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

