தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை கூடுதல் தொகுதிகளுடன் விசிக களம் காண்கிறது. இதில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார் கோவில் தனித் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
திருமாவளவனின் இந்த அறிவிப்பு வெளியாகி சில நாட்கள் கடந்தும், அவர் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மட்டுமே கடைசி நாளாக உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், இன்னும் ஓரிரு தினங்களே எஞ்சியுள்ள நிலையில் திருமாவளவன் இன்னும் அதிகாரப்பூர்வமாக மனுத்தாக்கல் செய்யாதது, அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முடிவை திருமாவளவன் மறுபரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாலும், எம்பி பதவியை ராஜினாமா செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும் கட்சியின் தேர்தல் பணிகளை மாநிலம் முழுவதும் ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் அவர் பின்வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் காட்டுமன்னார் கோவில் தொகுதிக்கு வேறு ஒரு புதிய வேட்பாளரை அறிவிக்க அவர் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசிகின்றன.
இந்தத் திடீர் மாற்றத்திற்கான காரணம் குறித்து இன்று அல்லது நாளைக்குள் திருமாவளவன் அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் போட்டியிலிருந்து விலகும் பட்சத்தில், காட்டுமன்னார் கோவில் தொகுதியில் மீண்டும் சிந்தனை செல்வன் களம் இறக்கப்படுவாரா அல்லது புதிய முகத்திற்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது விசிக தொண்டர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் விசிக தலைமையின் இந்த அடுத்தகட்ட நகர்வு தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

