திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளர் முரசு தமிழப்பன் சுயேச்சையாகக் களம் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியே, கூட்டணி வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிடுவது தொகுதிக்குள் தேவையற்ற குழப்பத்தையும் சலசலப்பையும் உருவாக்கியுள்ளது.
இந்தச் சூழலில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாகச் செயல்பட்டதாலும், கூட்டணி தர்மத்திற்கு மாறாகச் செயல்பட்டு கட்சிக்குக் களங்கம் விளைவித்ததாலும், முரசு தமிழப்பனை விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதிரடியாக அறிவித்துள்ளார். துரோகச் செயல்களையும் ஒழுங்கீனத்தையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்ற நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

