உத்தரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்திலுள்ள ஜாமு கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சோனு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிஷா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துள்ளார்.
சோனு வேலை நிமித்தமாக சூரத் நகருக்குச் சென்றுவிட, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட நிஷா, தனது மைத்துனர் மோனுவுடன் திருமணத்திற்கு மீறிய உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பிய சோனுவுக்கு இவர்களது விவகாரம் தெரியவந்துள்ளது.
இந்த உறவை சோனு கடுமையாக எதிர்த்ததால், தங்களுக்குத் தடையாக இருக்கும் அவரைத் தீர்த்துக்கட்ட நிஷாவும் மோனுவும் திட்டம் தீட்டினர். அதன்படி, ஏப்ரல் 5-ஆம் தேதி அதிகாலை சோனு தூங்கிக் கொண்டிருந்தபோது இருவரும் சேர்ந்து அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர் சோனுவின் உடலை ஆழ்துளைக் கிணற்றின் அருகே வீசிவிட்டு, அவர் தூக்கத்தில் பாம்பு கடித்து உயிரிழந்துவிட்டதாக நாடகமாடி அனைவரையும் நம்ப வைக்க முயன்றனர்.
ஆயினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் சோனு கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், நிஷா தனது மைத்துனருடன் சேர்ந்து கணவரைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். காதலித்துக் கைப்பிடித்த கணவனையே கள்ளக்காதலுக்காக மனைவியும் மைத்துனரும் சேர்ந்து கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிஷா மற்றும் மோனு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

