மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை நட்சத்திரப் போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக் கட்சி சார்பில், பிரபல இயக்குனர் சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து திமுக சார்பில் தற்போதைய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் களம் காண்கிறார். ஏற்கனவே இந்தத் தொகுதியில் இருமுறை வெற்றி பெற்றுள்ள பி.டி.ஆருக்கு இது ஹாட்ரிக் வெற்றிக்கான வாய்ப்பாகக் கருதப்படுகிறது. அதேசமயம், சுந்தர்.சி வெளியூர்க்காரர் என்றும், அவருக்குத் தொகுதியின் நிலவரம் தெரியாது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இயக்குனர் சுந்தர்.சி அரசியலில் தடம் பதிப்பதன் பின்னணியில் அவரது மனைவியும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. பாஜகவில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஏ.சி. சண்முகத்தின் பரிந்துரையில் தன் கணவரைத் தேர்தலில் குஷ்பு களமிறக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுந்தர்.சிக்கு இருக்கும் மிகப்பெரிய பலமே அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னம் தான். இதற்காகக் குஷ்புவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வேட்புமனு தாக்கலின் போதே அதிமுகவின் அடையாளமான பச்சை நிற சேலையில் வந்து கவனம் ஈர்த்தார்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் குறித்து குஷ்பு பதிவிட்ட பழைய ட்வீட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மத்திய அரசு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கியபோது, “ஹலோ பி.டி.ஆர்.. இப்போது என்ன செய்வீர்கள்? பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பீர்களா அல்லது பள்ளி மாணவன் போல புகார் கடிதம் எழுதுவீர்களா?” என குஷ்பு கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த பழைய மோதல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
குஷ்புவின் பழைய விமர்சனங்களால் ஆவேசமடைந்துள்ள திமுகவினர், அதை சுந்தர்.சிக்கு எதிராகத் திருப்பி விடத் தயாராகி வருகின்றனர். ஒருபுறம் நட்சத்திர அந்தஸ்து மற்றும் இரட்டை இலை சின்னத்தை நம்பி சுந்தர்.சி களம் காண, மறுபுறம் தொகுதியில் தனக்கிருக்கும் செல்வாக்கு மற்றும் அரசின் சாதனைகளை முன்வைத்து பி.டி.ஆர் தேர்தலை எதிர்கொள்கிறார். குஷ்புவின் அரசியல் நகர்வுகளும், பழைய ட்வீட்களும் இந்தத் தொகுதியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உருவெடுத்துள்ளன.

