கான்பூரின் பர்ரா-2 பகுதியைச் சேர்ந்த பூமி சிங் ரத்தோர் என்ற இளம் பெண், தனது பக்கத்து வீட்டுக்காரரின் மகனான நைதிக் கட்டியார் என்பவரால் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கும், பின்தொடர்தலுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தான் மொட்டை மாடிக்குச் செல்லும் போதோ அல்லது வெளியே வரும் போதோ நைதிக் தனக்கு ஆபாசமான சைகைகளைக் காட்டுவதாகவும், தான் சைக்கிளில் செல்லும் போதெல்லாம் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து தன்னை வழிமறிக்க முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து நைதிக்கின் பெற்றோரிடம் புகார் அளித்தும் பலனில்லை என்றும், மாறாக அவர்கள் தங்களது குடும்பத்தினரை மோசமாகப் பேசியதாகவும் பூமி அந்த வீடியோவில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தப் பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனப் பலரும் இணையத்தில் வலியுறுத்தி வந்தனர். பொதுமக்களின் இந்த விவாதத்தைத் தொடர்ந்து, கான்பூர் நகர் காவல் ஆணையர் இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார். பர்ரா காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சேகரிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட கடுமையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

