திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த ஆடியோவைத் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்த மாரிதாஸிற்கு எதிராக, ஆ.ராசா தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த ஆடியோ போலியானது என்றும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தனது குரலை வெட்டி, ஒட்டித் தவறாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆ.ராசா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட ரீதியான நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், யூடியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் ஆ.ராசாவிற்கு நேரடி சவால் விடுத்துப் பதிவிட்டுள்ளார். எப்போதும் மற்றவர்களை விவாதத்திற்கு அழைக்கும் ஆ.ராசா, இப்போது தன்னிடம் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். “ஒரே ஒரு மேடையை போடுங்கள், மொத்த ஊடகங்கள் முன்னிலையில் அந்த ஆடியோ உண்மையானதா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை நான் நிரூபிக்கத் தயார்” என மாரிதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவாதத்திற்கு ஆ.ராசா தனக்கு உதவியாக யாரை வேண்டுமானாலும் அழைத்து வரலாம் என்றும், தான் தனியாக வரத் தயார் என்றும் மாரிதாஸ் அந்தப் பதிவில் கூறியுள்ளார். “அது ஒட்டவோ, வெட்டவோ படவில்லை; அது உங்கள் குரல் தான் என்பதை நிரூபிக்க நான் தயார், நீங்கள் வரத் தயாரா?” என ஆவேசமாகக் கேட்டுள்ள மாரிதாஸ், திமுகவினரை விமர்சிக்கும் வகையில் தனது பதிவை முடித்துள்ளார். இந்த சவால் தற்போது இணையதளங்களில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

